டெல்லியில் இன்ஸ்டா பிரபலமான இளம் பெண்ணை, அவரது காதலனே கொலை செய்து புதைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் தான் இந்த 19 வயது இளம் பெண். இன்ஸ்டாவில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார். 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீரென கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லி மற்றும் ஹரியானாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான சோனி. இவர், சஞ்சு என்ற முகமது சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இன்ஸ்டா பிரபலமான சோனி, அவ்வப்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என்று சோனியின் சகோதரர் டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, சோனியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. தனது சகோதரி காணாமல் போனது தொடர்பாக அவரின் காதலன் மீது, சோனியின் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது சலீமை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சோனியுடன் முகமது சலீம் நெருங்கி பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது. அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால், தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். அதற்கு, சில நாட்கள் கடந்த பின் திருமணம் செய்வதாக சலீம் தெரிவித்துள்ளார்.
ஆனால், 7 மாத கர்ப்பிணியாக இருப்பதால் உடனடியாக திருமணம் செய்ய கூறி, கடந்த 21 ஆம் தேதி சோனி வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சலீம், தனது காதலியை கொலை சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, அவர் தனது நண்பர்களுக்கு போன் செய்து நீண்ட தூரம் பயணம் செய்வதற்காக வாடகைக்கு கார் எடுத்து வர கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த காரில் சோனி, தனது காதலன் சலீம் மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் உட்பட மொத்தம் 4 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். டெல்லியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதீனா பகுதிக்கு கார் சென்றுள்ளது. அங்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி சலீம் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சோனியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அவரை புதைத்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோனியின் உடலை தோண்டி எடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக காதலன் சலீம் மற்றும் அவரின் நண்பர் பங்கஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கொலையாளி ரித்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இளம் பெண் கொலை செய்யப்பட்டதில் வேறு ஏதும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 7 மாத கர்ப்பமாக இருந்த காதலியை திருமணம் செய்ய மறுத்த காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதில், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். தலைமறைவான மற்றொரு கொலையாளி ரிதிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.