நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அடுத்த பொட்டல் கிராமத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ஆற்று மணல் பல கோடி ரூபாய் மதிப்பில் கடத்தியதற்கு உடந்தையாகச் செயல்பட்டதாக கனிமவளத்துறை உதவி இயக்குனர் சபியாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், 2019 நவம்பர் முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல்ஜார்ஜ், எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். மேலும் எம். சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாக அனுமதியை பெற்று விட்டு அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான ஆற்று மணல் கேரளாவிற்கு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, போலீசார், பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.சாண்ட் நிறுவனத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் பிரதீக் தயாள் மணல் திருட்டு நடைபெற்றதை உறுதி செய்ததோடு அந்த நிறுவனத்திற்கு 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட சமீர் கைது செய்யப்பட்டார். அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீயா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். சபியாவிற்கு நேரடியாக தொடர்பு இருந்தபோதிலும் அவர் அரசியல் பலம் காரணமாக கைது செய்யப்படவில்லை என கூறப்பட்டது.
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே 2021 ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டிபோலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த பிப்ரவரி 5 ம் தேதி மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல்மார் இரேனியஸ் மற்றும் ஐந்து பாதிரியார்களை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த மணல் கொள்ளை வழக்கில், அப்போது திருநெல்வேலி மாவட்ட கனிமவள உதவி இயக்குனராக இருந்த சபியா கையெழுத்திட்டது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்து அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குனராக உள்ள சபியாவை பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உயர் பொறுப்பில் இருந்த நபரின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் அவரும் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…