திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே தான் இறந்ததாக நாடகமாடிய 2 குழந்தைகளின் தாயை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே வல்லவன் விளையை சேர்ந்தவர் தில்லைவன பாண்டி மகன் பவித்ரன் (வயது 25) இவருக்கு திருமணமாகவில்லை. அப்பகுதியில் கார் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 24ஆம் தேதி தங்கள் குடும்பத்தினரிடம் கடலில் மீன்பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு தூண்டிலோடு பைக்கில் ஏறி சென்றுள்ளார். தனது செல்போனை வீட்டில் வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது.
மீன்பிடிக்க சென்றதாகக் கூறி விட்டு சென்ற பவித்ரன் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் கடற்கரை சென்று பார்த்தபோது அவரது பைக் செருப்புகளும் மட்டுமே அங்கு இருந்ததை கண்டதால் மேலும் பதட்டம் அடைந்தனர். மீன்பிடிக்க சென்றபோது கடல் அலை பவித்ரனை இழுத்துச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உவரி போலீசாரிடம் பாண்டி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதனிடையே திசையன்விளை அருகே ராமன் குடியை சேர்ந்த சதீஷ் கரை சுத்து புதூரில் பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சாந்தி குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மாயமானார். அவரது செல்போனும் வீட்டிலேயே இருந்தது இதுகுறித்து கணவர் சதீஷ் உவரி போலீசாரிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் தில்லைவன பாண்டி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென மாயமானது தொடர்பாக மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே பவித்ரன் சாந்தி இருவரும் காணாமல் போன நிலையில் காரும் மாயமானதால் அவர்கள் காரை எடுத்து விட்டு ஊர் சுற்ற சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர் அப்போது சாந்தி தனது செல்போனில் சிம் கார்டை மாற்றி மற்ற நபர்களிடம் பேசுவது காவல்துறைக்கு தெரிய வந்தது.அந்த எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்ததில் அது உளுந்தூர்பேட்டையை அடையாளம் காட்டியதாக தெரிகிறது.
இதனை அடுத்து உவரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை சென்று செல்போன் டவர் சிக்னல் காட்டிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் முன்பு தில்லைவன பாண்டியன் கார் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனருகே இருந்த வீட்டில் சென்று பார்த்தபோது பவித்ரன் சாந்தியுடன் அந்த வீட்டில் குடும்பம் நடத்துவது தெரியவந்தது. உடனடியாக பவித்ரன் சாந்தி இருவரையும் உவரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இரு குடும்பத்தாரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது பொருந்தாத உறவு அதிக நாட்கள் நீடிக்காது எனவே இதனை கைவிடுமாறு இரு குடும்பத்தாரும் பவித்ரன் மற்றும் சாந்தியை வலியுறுத்தினர். ஆனால் சாந்தி அவனுடன் தான் வாழ்வேன் தனது கணவருடன் செல்ல மாட்டேன் என கதறியதாக தெரிகிறது. இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு அதனை தானே பார்த்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார். குழந்தைகளை ஒப்படைக்க சதீஷ் மறுத்ததோடு காவல்துறையும் அதற்கு உடன்படவில்லை. குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி மனு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
ALSO READ |
TN Assembly | இனி குறைந்த செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் – அமைச்சர் கே.என்.நேரு
இறுதியில் வேறு வழியின்றி சாந்தி தன் குடும்பத்தினருடன் செல்ல சம்மதித்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் பவித்திரன் சாந்தி இருவரையும் அறிவுரை கூறி அவரவர் குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். திருமணமாகாத வாலிபர் தான் இறந்ததாக நாடகமாடிய 2 குழந்தைகளின் தாயை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாத நிலையில் இருவரும் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…