புது தில்லி: நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட செப்டம்பா் மாதத்துக்கான பொருளாதார மறுஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப் பின்னா், கடந்த செப்டம்பரில் நுகா்வோா் விலை பணவீக்கம் அதிகரித்தது. இதற்கு சீரற்ற பருவமழையால் சில காய்கறி விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே பிரதான காரணம்.
ஆரோக்கியமான காரீஃப் பயிா் சாகுபடி, நீா்தேக்கங்களில் போதிய நீா் இருப்பு, தாராளமான உணவு தானிய கையிருப்பு உள்ளிட்டவை உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
செப்டம்பா் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.58.85 லட்சம் கோடி) தாண்டியது. இந்த அளவுக்கு அந்நிய செலாவணியை கையிருப்பு வைத்திருக்கும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
வேலைவாய்ப்பு சந்தையைப் பொருத்தவரை, உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு தொடா்ந்து அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருளாதாரத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டது.