கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற யூடியூபர் தம்பதி திடீரென உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி பகிர்ந்த வீடியோக்களுக்கு எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததால் இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியதா? நடந்தது என்ன?
கேரள மாநிலம் பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான செல்வராஜ். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சேது என்கிற மகனும், பிரீது என்ற மகளும் இருக்கிறார்கள். மகனும் மகளும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். கட்டடத் தொழிலாளியான செல்வராஜ் தனது மனைவியின் உதவியுடன் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அதில் சமையல் குறிப்பு உள்ளிட்ட வீடியோக்களைப் பதிவிட்டு வந்தனர்.
இவர்கள் பதிவிட்ட வீடியோக்களுக்கு அதிக லைக்ஸ்கள் குவிந்த நிலையில், தம்பதி இருவரும் புகழடைய ஆரம்பித்தனர். இதனால் கட்டடத் தொழிலை விட்டுவிட்டு முழுநேர யூடியூபராகவே தம்பதியினர் மாறிவிட்டனர்.
அதில் அவ்வப்போது வருமானம் வந்த போதும், சில சமயங்களில் வருமானம் பெரிதாகக் கிடைப்பதில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு வீடியோவை யூடியூப்பில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மகன் சேது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. பலமுறை அழைத்தும் போனை எடுக்காததால் அதிர்ந்து போன மகன் சேது, நேராக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது தாய் பிரியா விஷம் குடித்த நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார். தந்தை செல்வராஜ் தூக்கில் பிணமாகத் தொங்கியபடி கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன சேது இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த பாறசாலை போலீசார் இரு உடல்களையும் மீட்டு வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் தம்பதி இருவருக்கும் கடன் தொல்லை இருந்து வந்ததாகத் தெரிகிறது. சமீபத்தில் யூடியூப்பில் போட்ட வீடியோக்களுக்கு முன்பு போல் வியூவ்ஸ்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
Also Read |
#BoycottSaiPallavi இணையத்தில் டிரெண்டாக என்ன காரணம்? சாய் பல்லவி பேசியது என்ன?
அதோடு ஒவ்வொரு வீடியோவுக்கும் எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததாகத் தெரிகிறது. இதனால், மனம் உடைந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் கடன் தொல்லை தான் தற்கொலைக்குக் காரணமா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனை காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் மனைவியை கொலை செய்த பின்னர் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகே கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
.