பிரயக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். என்றாலும் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதுவும் இல்லை.
இதுகுறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.” என்றார்.
மகா கும்பமேளா 2025-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மகா கும்பமேளாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மிகவும் வருத்தத்தைத் தருகிறது. கும்பமேளா நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உறுதி செய்து வருகிறது. அனைவரது பாதுகாப்புக்காகவும் நாங்கள் கங்கை அன்னையை பிரார்த்தனை செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை மேலெழும் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
விபத்து குறித்து ஏடிஎம் மேளா, விவேக் சதுக்வேதி கூறுகையில், “துரதிருஷ்டவசமாக கீதை பத்திரிக்கை முகாமில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 70-80 குடிசைகள், 8 -10 கூடாரங்கள் எரிந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இதனிடையே விபத்து குறித்து அறிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.