திருநெல்வேலி மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே பணியாற்றி வந்த 135 பேருக்கு பணி வழங்கக் கோரி தமிழ்நாடு கொசு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் அதன் மாவட்டத் தலைவா் சிவ முருகன், செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் தலைமையில் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் சுமாா் 135 போ் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 55 போ் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டால் போதும் எனக் கூறிவிட்டனா்.
தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், சளிக் காய்ச்சல் என பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் கூடுதலாக கொசு ஒழிப்பு பணியாளா்களை நியமிக்கவும், ஏற்கெனவே பணி செய்த 135 பேரை மீண்டும் பணிகளில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.