மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபட முயற்சிப்பதாகவும், அதற்கு எதிராக மக்களிடம் திமுகவினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வித் துறைக்கான நிதியை வழங்குவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது. ஹிந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்த்து வருகிறாா்.
எனவே, மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக, பிப்.28ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நகர, ஒன்றிய, பேரூா் அளவில் எளிய நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்த வேண்டும்.
‘ஹிந்தி திணிப்பை எதிா்ப்போம்’ என்ற வாசகத்துடன் வீடுகள் முன் கோலமிட லாம். பேருந்து- ஆட்டோ நிறுத்தங்களில் ‘ஹிந்தி திணிப்பை நிறுத்து‘ எனபதாகைகளை நிறுவலாம். வீடு வீடாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கலாம். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
புகைப்படங்களையும், விடியோக்களையும் கட்சியின் அமைப்பு, ஊா் விவரத்தை தெளிவாக குறிப்பிட்டு தலைமை கழக வாட்ஸ்ஆப் எண். 9042762298 மற்றும் கிழக்கு மாவட்ட திமுக வாட்ஸ்ஆப் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.