Last Updated:
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (RPF) பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ரயிலுக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்களுடன் சேர்ந்து கழிவறை கதவை உடைத்தனர்.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ரயில் பயணம் சில பயணிகளுக்கு பெரும் சவாலாக அல்லது அதிர்ச்சியூட்டும் வகையிலான அனுபவத்தை அளிக்கிறது. சமீபத்தில் இதுபோன்று நடந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியாவில் வசிக்கும் அனில் குமார் என்பவர், டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். 35 வயதான அனில், டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் லிச்சாவி எக்ஸ்பிரஸ் (Lichchavi Express) ரயிலில் ஏறி ஆனந்த் விஹாரில் இருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இவர் பயணித்த ஆனந்த் விஹார் டெர்மினலுக்கும் சீதாமரிக்கும் இடையே ஓடும் லிச்சாவி எக்ஸ்பிரஸில் உள்ள ஒரு கழிவறை சுமார் 12 மணிநேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிட்ட ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லிச்சாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் குறிப்பிட்ட கழிவறைக்கு சென்ற அனில்குமார் அதன் பிறகு கழிவறையிலிருந்து வெளியே வரவே இல்லை. அவர் டாய்லெட்டிற்கு சென்று பல மணி நேரங்களாகியும் கதவு திறக்கப்படாததால், சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வெளியே இருந்த பயணிகள் கழிவறை கதவை நீண்ட தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை. ஓடும் ரயிலில் நீண்ட நேரமாக கழிவறை கதவு திறக்கப்படாததால் அனைவரும் பீதியடைந்தனர். ரயில் மவ் ஜங்ஷனை அடையும் வரை பயணிகள் மத்தியில் பதற்றம் நீடித்தது.
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (RPF) பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ரயிலுக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப பணியாளர்களுடன் சேர்ந்து கழிவறை கதவை உடைத்தனர். அப்போது கழிவறையினுள்ளே அனில்குமார் தரையில் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அனில்குமாரின் உடல்நிலை சீராக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். காசியாபாத் ஸ்டேஷனை ரயில் அடைந்தபோது கழிவறைக்கு சென்ற அனில்குமாருக்கு திடீரென அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெளியே இருக்கும் பயணிகளை உதவிக்கு அழைக்கவோ அல்லது கதவை திறக்கவோ அவரால் முடியாத சூழல் இருந்ததாக ஆர்பிஎஃப் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே சுமார் 12 மணி நேரம் மூடிய கழிவறையில் அனில்குமார் சிக்கிக் கொண்டார். கழிவறையில் சிக்கி கொண்ட போது அனில்குமார் கடுமையான அசௌகரியம் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில கடுமையான அறிகுறிகளை எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், பயணிகள் மற்றும் RPF ஆகியோரின் உதவியால் உரிய நேரத்தில் அனில்குமார் காப்பாற்றப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
April 26, 2025 9:23 AM IST