குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என பரவலாக தகவல்கள் பரவிய நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனையை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி காலை ஒரு பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த மேற்குவங்க காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது. மேலும், கொல்லப்பட்டு கிடந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகியிருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு போராட்டங்களும் நடந்தன.
இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட 9-ம் தேதியே குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கு ஆதாரமாக செமினார் ஹாலில் இருந்த உடைந்த ப்ளூடூத்தை போலீஸார் காண்பித்தனர். அந்த ப்ளூடூத் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் போனோடு இணைந்திருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார் தெரிவித்திருந்தார். அதேபோல், இறந்த பெண்ணின் பெற்றோரும் சுதந்திரமான விசாரணை வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அதன்படி, 45 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில், பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று இல்லை. சஞ்சய் ராய் மட்டுமே தனியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். குற்றம் நடந்த அந்த சமயத்தில் அவர் போதையில் இருந்துள்ளார்.
சி.சி.டி.வி. காட்சியில் 9-ம் தேதி சஞ்சய் ராய் செமினார் ஹாலில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவதும் பதிவாகியுள்ளது.
தடயவியல் துறையின் ஆதாரங்களும், டி.என்.ஏ. மாதிரிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதியாகியுள்ளது என்று தெரிவித்து சஞ்சய் ராயை குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதாடப்பட்டது.
இதையும் படிங்க – நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
விசாரணையின்போது, தன்னை பேசவே விடவில்லை என்றும், பல ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு தான் துன்புறுத்தப்பட்டதாகவும் சஞ்சய் ராய் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த நீதிபதி ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள்தான் குற்றத்தை செய்துள்ளீர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்து தண்டனை விபரங்களை அறிவித்துள்ளார்.
January 20, 2025 3:07 PM IST