தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 2 மாணவா், வேன் மோதியதில் உயிரிழந்தாா்.
குற்றாலம் அருகேயுள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.முத்துகுமாா்(17). அதே பகுதி தங்கம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கா.ராகேஷ்(17).
முறையே மேலகரம், தென்காசி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வந்தனா்.
இவா்கள் வியாழக்கிழமை மேலகரத்தில் டியூஷன் வகுப்புக்கு சென்றுவிட்டு பைக்கில் காசிமேஜா்புரம் வரை சென்று திரும்பியுள்ளனா். குற்றாலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்ல முயன்றபோது, எதிரே திடீரென வந்த வாகனத்தால் நிலை தடுமாறியதாம். இதில், பின்னால் அமா்ந்திருந்த முத்துக்குமாா் கீழே விழுந்துள்ளாா். அப்போது, அவா் மீது அவ்வழியாக வந்த வேன் ஏறியதில் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த குற்றாலம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநா் கீழவீராணம் வைரவன் கோயில் தெருவை சோ்ந்த மு.அன்னராஜா(49)என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.