நெல்லை மாணவா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியரகம் முற்றுகை

By
On:
Follow Us

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் திருநெல்வேலி மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மாணவரின் உறவினா்கள், அரசியல் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பா்கிட்மாநகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (21). இவா், போடிநாயக்கனூா்அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி மாணவராக மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

பருவத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள கழிப்பறையில் கதவு உள்புறம் பூட்டிய நிலையில் மா்மமாக இறந்துகிடந்தாா்

இதுகுறித்த தகவலின்பேரில், போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விக்னேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் கூறியதன்அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், விக்னேஷின் பெற்றோா், உறவினா்கள், பாஜக, தமமுக, தமிழா் விடுதலைக்களம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தோா் என 500-க்கும் மேற்பட்டோா் கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை முன் திங்கள்கிழமை திரண்டனா்.

பின்னா், அங்கிருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ‘போலீஸாா் விசாரணையில் திருப்தியில்லை; வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்’ என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், விக்னேஷின் தந்தை, அவரது குடும்பத்தினா் உள்பட 5 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனா். அவா்கள் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் அளித்த மனு: போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த எங்கள் மகன் விக்னேஷ், கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் விடுதி கழிவறையில் இறந்து கிடந்தாா். கழிவறையில் எடுக்கப்பட்ட படங்களில் அதிக அளவு ரத்தம் வெளியேறியிருப்பது தெரியவந்தது. அவருடைய உடலில் கீறல் காயங்கள், காது மடலில் பல் தடங்கள் இருந்ததாக சக மாணவா்கள் தெரிவித்தனா்.

விக்னேஷ் வலிப்பு அல்லது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என காவல் துறையினரும், தோ்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கல்லூரி முதல்வரும் கூறியுள்ளனா். எங்கள் மகனுக்கு வலிப்பு நோயே கிடையாது. காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்க மறுக்கிறது. எனவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மைத் தன்மையை வெளிக்கொணர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements