உண்மையைக் கண்டறிய அனைவரும் அணிதிரளுவோம்: சஜித் பிரேமதாச

By
On:
Follow Us

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் பல்வேறு தரப்பினரும் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் இவர்களுக்குரிய நீதியை வழங்க விரும்பவில்லை என்பது இன்றும் தெளிவான உண்மையாகும்.  எனவே வீண் பேச்சுக்களை தவிர்த்து நீதியை நிலைநாட்ட உண்மையைக் கண்டறிய அனைவரும் ஒன்றிணைவோம்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து மனித இதயத்தில் உள்ள இருளை அகற்றி, புதிய நம்பிக்கையை வழங்கி, மனித வாழ்க்கையை மாற்றும் திறனை வெளிப்படுத்தியது இதன் சிறப்பம்சமாகக் கருதலாம். 

ஆனால், 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நமது நாட்டில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சில ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்த மனிதாபிமானமற்ற தற்கொலைத் தாக்குதலால் இன்றும் நமது நாட்டின் கத்தோலிக்க மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சில அரசியல் கட்சிகளின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க முடியாததால், 6 ஆண்டுகள் கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.

தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் இவர்கள் இழந்த நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் இவர்களுக்குரிய நீதியை வழங்க விரும்பவில்லை என்பது தெளிவான உண்மையாகும். எனவே, வீண் பேச்சுக்களையும், பொய் வாக்குறுதிகளையும் தவிர்த்து, இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைக்க அனைவரும் செயல்பட வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கங்களையும், பிற்போக்குத்தனமான போக்குகளையும் கடந்து, அனைவரும் ஒன்றிணைந்து நாடாக நல்ல எதிர்காலப் பயணத்திற்காக அணிதிரள வேண்டும் என இறுதியாக அனைவரிடமும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.” என்று சஜித் பிரேமதாச விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements